BT Assistant Graduates Teachers Appointed List Announced, Remaining subject English, maths and chemistry announced before 14th september




Friday, 26 August 2011

13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் அறிவிப்பு

13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் அறிவிப்பு சென்னை, ஆக.26 (டிஎன்எஸ்) முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (ஆக.26) சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது; கல்வி என்னும் வற்றாத செல்வம், தனி மனிதன் வாழ்க்கையை வளம் பெறச் செய்யவும், அவன் சார்ந்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகிறது. பொருளாதார வளர்ச்சி அடைவது மட்டும் அன்றி, வாழ்க்கையில் பல்வேறு நலன்களையும் முழுமையாகப் பெறுவதற்கு கல்வி இன்றியமையாதது ஆகிறது. இத்தகைய பயன் மிக்க கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரமாக அளிப்பதற்கும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையில் குழந்தைகள் கல்வி கற்கும் வசதியை அளிப்பதற்கும்; இவை மூலம் உண்மையான, நிலையான சமச்சீர் கல்வி வழங்கிடவும் எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் தரமான கல்வியைப் பெறும் வகையில், எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட உள்ள சில புதிய திட்டங்கள் குறித்து நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இவ்வரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை 419 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்-மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது. அதன்படி, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, 315 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். (டிஎன்எஸ்) Aug 26, 2011

No comments: